
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களின் பரிந்துரைகளால் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமரின் சுதேசி அழைப்புக்கு இணங்க, இந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலவசமான, எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான செயலியைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சாதாரண உரையாடல் என பொருள்படும் அரட்டை செயலியானது, பயனர்களுக்கு மெசேஜ் அனுப்புதல், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், படங்கள், ஆவணங்களைப் பகிர்வது, ஸ்டோரீஸ் உருவாக்குவது மற்றும் சேனல்களை நிர்வகிப்பது போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களையும் வழங்குகிறது.
வெளிநாட்டு சார்பு
வெளிநாட்டு சார்பைக் குறைத்தல்
குறைந்த அலைவரிசை (Low Bandwidth) மற்றும் திறன் குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் சுமூகமாக இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக சோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேசத் தொழில்நுட்பச் செயலிகள் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக இந்த ஊக்குவிப்பு பார்க்கப்படுகிறது. அரட்டை செயலி அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கினாலும், அதன் மெசேஜ் அம்சத்திற்கான இதே அளவிலான என்கிரிப்ஷனை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே முக்கியச் சவாலாக உள்ளது. வாட்ஸ்அப்பின் பெரிய பயனர் தளத்துடன் ஒப்பிடும்போது, அரட்டை இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், உள்நாட்டுத் தொழில்நுட்பத் தீர்வைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக வளர்ந்து வருகிறது.