விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ மிஷன் ஆகமன் என்ற திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், தனது இறுதி உந்துதல் கட்டங்களை முடித்துத் திட்டமிட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாகத் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்கலத்தை சுற்றுப்பாதைக்கு அனுப்பிய உலகின் 3வது நாடு என்ற அசாத்திய பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
பிரதமர் பாராட்டு
விண்வெளித் துறை சீர்திருத்தங்களை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி
விக்ரம்-1 ராக்கெட்டின் இந்த வெற்றிக்காக ஒட்டுமொத்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவிற்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது ஒரு புதிய வரலாற்று எல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "இந்த நான்கு கட்ட ராக்கெட், விரைவான மற்றும் தேவைக்கேற்ற ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகுதிச் சுற்றுப் பயணம் நமது இளைஞர்களின் அசாத்திய திறமை, உறுதிப்பாடு மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.
விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடுகின்றன என்பதையும் இது உணர்த்துகிறது" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வடிவமைப்பு
450 கிமீ சுற்றுப்பாதையைக் குறிவைத்த நான்கு கட்ட விக்ரம்-1 வடிவமைப்பு
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு 'விக்ரம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு அடுக்கு உயரமுள்ள ராக்கெட்டானது 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களைப் குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதைக்கு (Low Earth Orbit) கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும்.
இந்தத் தொடக்கப் பயணத்தில் 60 டிகிரி சாய்வில் சுமார் 450 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையை அடைவதை இலக்காகக் கொண்டு இது ஏவப்பட்டது.
கார்பன்-கம்போசிட் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ராக்கெட், 3D-பிரிண்டட் திரவ இன்ஜின்கள் மற்றும் அதிநவீன திட எரிபொருள் பூஸ்டர்களைக் கொண்டு ஸ்கைரூட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வந்தே மாதரம்
விண்வெளியில் பாய்ந்த பிரதமர் மோடியின் 'வந்தே மாதரம்' அஞ்சல் அட்டை
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மிஷன் ஆகமன் பயணத்தில் பல முக்கியமான பேலோடுகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதில் மிகவும் தனித்துவமான அம்சமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பட எழுதிய வந்தே மாதரம் என்ற செய்தியைக் தாங்கிய அஞ்சல் அட்டை விக்ரம்-1 ராக்கெட் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவற்றுடன் செயற்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்களால் செய்யப்பட்ட வைரத் தாமரை கலைப்படைப்பு, விஞ்ஞானிகளான சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் நுண்கல் சிற்பங்கள் அடங்கிய 18 கேரட் தங்க மைக்ரோ ராக்கெட் மற்றும் விண்வெளிக் கழிவுகளை சேகரிக்கும் ரோபோடிக் கை போன்ற அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகளும் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
தனியார் பங்களிப்பு
இந்திய விண்வெளித் துறையில் அசுர வேகத்தில் வளரும் தனியார் பங்களிப்பு
இந்திய விண்வெளித் துறையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் மட்டுமே இருந்த நிலையில், தற்போதைய இந்திய விண்வெளி கொள்கை சீர்திருத்தங்களின் காரணமாக இந்த எண்ணிக்கை 400க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட்அப்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகள் மற்றும் ஸ்கைரூட், அக்னிகுல் போன்ற பிற தனியார் விண்வெளி நிறுவனங்களின் வருகையோடு, உலகளாவிய விண்வெளி சந்தையில் இந்தியாவின் வணிகப் பங்களிப்பு கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.