இந்தியாவின் AI எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 'AI Impact Summit 2026': பிப்ரவரி 16 முதல் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு பறைசாற்றவும் 'AI Impact Summit' புது டெல்லியில் நடைபெறவுள்ளது. வெறும் திட்டமிடலோடு நிற்காமல், AI தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்தில் ஏற்படும் "தாக்கத்தை" (Impact) மையமாக கொண்டு இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு, புது டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பாரத் மண்டபத்தில் வரும் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் 2025 அக்டோபரிலேயே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளிடமிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட செயல்திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
அடிப்படை
ஏழு முக்கிய கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் மாநாடு
இந்த மாநாடு மனிதவளம், சமூக அதிகாரம், பாதுகாப்பான AI, புத்தாக்கம், அறிவியல் வளர்ச்சி, AI வளங்களை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய 7 முக்கியக் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
முக்கியத்துவம்
தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம்
இந்தியா 2047-க்குள் உலகளாவிய சேவை சந்தையில் 10 சதவீத பங்கைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு இந்த மாநாடு ஒரு அடித்தளமாக அமையும். இதில் அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் என உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் நேரில் பங்கேற்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இடைவெளியை குறைத்து, மனித மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு AI எவ்வாறு உதவும் என்பதை இந்த உச்சிமாநாடு உலகிற்கு உணர்த்தும். நேரடி விவாதங்கள், பணிமனைகள் மற்றும் தலைமைத்துவ உரைகள் மூலம் இந்தியாவின் AI எதிர்காலம் இங்கு வடிவமைக்கப்படவுள்ளது.
வரலாறு
AI இம்பாக்ட் உச்சி மாநாடு
முன்னர் தெரிவித்தது போல இந்தாண்டின் AI இம்பாக்ட் உச்சி மாநாடு, பிப்ரவரி 19 முதல் 20 வரை டெல்லியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த சர்வதேச உச்சிமாநாடு இது ஆகும். இது பிப்ரவரி 2025 இல் பாரிஸில் நடந்த AI செயல் உச்சி மாநாடு (AI action summit) , 2024 இல் 2024 AI சியோல் உச்சி மாநாடு மற்றும் 2023 இல் பிளெட்ச்லி பார்க் AI பாதுகாப்பு உச்சி மாநாடு ஆகியவற்றைத் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு AI இன் பாதுகாப்பு குறித்த அரசாங்க கவலைகளை நிவர்த்தி செய்ய உலக நாடுகள் ஒன்று கூடும் ஒரு மேடையாகும் .