LOADING...
திடீரென முடங்கிய சாட்ஜிபிடி! ஐபோன் பயனர்களை அலறவிட்ட 403 Error! என்னாச்சு தெரியுமா?
சாட்ஜிபிடி முடக்கம்

திடீரென முடங்கிய சாட்ஜிபிடி! ஐபோன் பயனர்களை அலறவிட்ட 403 Error! என்னாச்சு தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 12, 2026
06:39 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நூற்றுக்கணக்கான பயனர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை புகாரளித்ததைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ நிறுவனம் தனது சேவைகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக முடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தும் போது அல்லது உரையாடல்களை லோடு செய்யும் போது சில பயனர்கள் '403 எரர்' (403 errors) பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம் என்று நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சேவை நிலைப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஐபோன் பயனர்கள்

ஐபோன் பயனர்களைப் பாதிக்கும் 403 எரர் மற்றும் உயர்ந்த பிழை விகிதம்

பயனரின் கோரிக்கையை சர்வர் புரிந்துகொண்டாலும், அதற்கான அணுகலை வழங்க மறுக்கும் போது பொதுவாக இந்த 403 எரர் ஏற்படும். இது சர்வர் பக்க தொழில்நுட்பக் கோளாறுகள், அனுமதி சிக்கல்கள் அல்லது பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக நிகழலாம் என்றாலும், தற்போதைய முடக்கத்திற்கான அசல் காரணத்தை ஓபன்ஏஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும், ஐபோன் பயனர்களுக்கான சாட்ஜிபிடி உரையாடல்களில் பிழை விகிதம் (Error Rates) கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இந்தச் சிக்கல் எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்ற விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

நெட்டிசன்கள் விமர்சனம்

டவுன்டிடெக்டர் தளத்தில் குவியும் புகார்கள் மற்றும் சமூக வலைத்தள எதிர்வினைகள்

பாதிப்புகளைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் தளத்தின்படி, அமெரிக்காவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த சேவை முடக்கத்தைப் புகாரளித்துள்ளனர். இதில் 77 சதவீத புகார்கள் சாட்ஜிபிடி இணையதளம் சார்ந்தும், 15 சதவீதம் மொபைல் செயலி சார்ந்தும், 5 சதவீதம் லாகின் சிக்கல்கள் சார்ந்தும் பதிவாகியுள்ளன. குறிப்பாக நியூயார்க், ஹூஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய அமெரிக்க நகரங்களில் இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது.

Advertisement

எக்ஸ் தளம்

எக்ஸ் தளத்தில் கொந்தளித்த பயனர்கள்

இந்த சேவை முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பயனர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பயனர் ஒருவர், தனது கணக்கில் லாகின் செய்ய முடியவில்லை என்றும், இந்த செயலியை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு கிளாட் செயலிக்கு மாறப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், தனது சாதனத்தில் இருந்து அசாதாரண செயல்பாடு இருப்பதாகக் காட்டி லாகின் செய்ய மறுப்பதாகவும், பணம் செலுத்திப் பயன்படுத்தும் சேவையில் கடந்த இரண்டு வாரங்களாக இத்தகைய குளறுபடிகள் நீடிப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஓபன்ஏஐ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement