30 நாட்கள் இலவச விசா அறிவித்த உஸ்பெகிஸ்தான்; சில்கி ரோடு சுற்றுலா பயணம் இனி ரொம்ப ஈஸி
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் நாட்டு பயணத்தின் போது, இந்தியக் குடிமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் மற்றும் வர்த்தகத்தைப் பலப்படுத்தும் நோக்கில், இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லா நுழைவு உரிமையை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உடனடி அமலுக்கு வருவதால், இந்திய சுற்றுலா பயணிகள் இனி விசா இன்றி உஸ்பெகிஸ்தான் செல்ல முடியும்.
சுற்றுலா
சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை உயர்த்த புதிய நடவடிக்கை
தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அதிபர் மிர்சியோயேவ், "இந்தியா எங்களின் நம்பிக்கைக்குரிய மூலோபாய கூட்டாளியாகும்.
கடந்த ஆண்டில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 1 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
தற்போது வாரத்திற்கு 14 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த 30 நாள் விசா இல்லா நுழைவு சலுகையானது இருநாட்டு மக்களிடையேயான தொடர்பை அதிகரித்து, சுற்றுலா மற்றும் வணிகப் பரிமாற்றங்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று நகரங்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களை ரசிக்கும் வாய்ப்பு
இந்த புதிய கொள்கை மாற்றத்தின் மூலம் மத்திய ஆசியாவின் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை இந்திய பயணிகள் மிக எளிதாகச் சென்று பார்வையிட முடியும்.
தலைநகர் தாஷ்கண்டில் உள்ள ஹஸ்ரத் இமாம் வளாகம் மற்றும் சோர்சு பஜார், பழமையான சில்க் ரோடு நகரங்களான சமர்கண்ட் மற்றும் புகாரா ஆகியவை சுற்றுலா பயணிகளைக் கவரும் முதன்மை இடங்களாகும்.
மேலும், சிம்கான் மலைகள் மற்றும் சார்வாக் நீர் தேக்கம் ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளும் இந்தியப் பயணிகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரும்.
உடனடி அமல்
உடனடி அமலுக்கு வந்த புதிய விசா கொள்கை
உஸ்பெகிஸ்தானில் மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பெயரிலான மையங்கள் இயங்கி வருவதும், யோகா கலையின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதும் கலாச்சாரப் பிணைப்பை உணர்த்துகிறது.
தற்போது இந்த விசா இல்லா அனுமதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்திய பயணிகள் குறைந்த செலவில் தங்களது மத்திய ஆசிய பயணத்தை உடனடியாகத் திட்டமிட முடியும்.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்குப் புறப்பட்டு சென்றார்.