சாப்பிட்டதும் தண்ணி குடிக்கக் கூடாதா? காலம் காலமான நம்பிக்கையில் இருக்கும் உண்மை என்ன?
செய்தி முன்னோட்டம்
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள செரிமான அமிலங்கள் நீர்த்துப்போகும், இதனால் செரிமானம் மெதுவாகும் என்ற ஒரு கருத்து நம்மிடையே நீண்ட காலமாக உள்ளது. ஆனால், இந்தத் தகவல் ஒரு கற்பனை என்றும், இதில் மருத்துவ ரீதியாக உண்மை இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர். நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். நமது வயிறு மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு ஏற்ப, செரிமான அமிலங்களையும் என்சைம்களையும் தானாகவே சீரமைத்துக் கொள்ளும் திறன் வயிற்றுக்கு உண்டு. "ஒரு கிளாஸ் தண்ணீரால் செரிமானத்தை நிறுத்திவிட முடியாது. உடல் தானாகவே அமிலத்தின் செறிவை சரிசெய்துகொள்ளும்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்மைகள்
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மிதமான அளவில் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உண்மையில் உதவியாகவே இருக்கும். உணவில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து உடல் எளிதாக உறிஞ்சுவதற்கு துணைபுரிகிறது. தண்ணீர் குடிப்பது உணவை மென்மையாக்குகிறது, இது குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. கனமான உணவுகளை சாப்பிடும்போது, தண்ணீர் குடிப்பது உணவு செரிமானப் பாதையில் எளிதாக நகர உதவுகிறது. தண்ணீர் குடிப்பது பிரச்சனையல்ல, ஆனால் எவ்வளவு குடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் குடித்தால், வயிறு உப்புசம் அல்லது கனமான உணர்வு ஏற்படலாம். இது தற்காலிகமானதுதான் என்றாலும், சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பிறகு மிதமான அளவில் தண்ணீர் குடிப்பது சிறந்தது. ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்குச் சரியான அளவில் நீர்ச்சத்து இருப்பது அவசியமாகும்.