8.25% பேருக்கு மட்டுமே வேலை! பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காதது ஏன்? நிதி ஆயோக் அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற போதிலும், அவர்கள் படித்த படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள விக்சித் பாரத் @2047க்கான மறுசீரமைப்புத் திறன்கள் என்ற ஆய்வறிக்கையின்படி, நாட்டில் பட்டம் பெறும் மாணவர்களில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்கள் படித்த படிப்பு தொடர்பான வேலைவாய்ப்பு கிடைப்பது தெரியவந்துள்ளது.
இடைவெளி
பாடத்திட்டத்திற்கும் பணித் தேவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி
இந்தியாவின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி முறையானது, தற்போதைய தொழில் நிறுவனங்களின் தேவைகளோடு ஒத்துப்போகவில்லை என நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது.
கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பழமையான பாடத்திட்டங்கள் மாணவர்களைப் பணிக்குத் தயார்படுத்துவதில்லை.
உதாரணமாக பிஏ, பிஎஸ்சி, பிகாம் போன்ற பொதுவான படிப்புகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் நிலையில், அக்கல்வித் தகுதிகள் நேரடி வேலைவாய்ப்பிற்கு உதவுவதில்லை.
மேலும் டேலி அல்லது கணினி சார்ந்த கூடுதல் திறன்கள் அவசியமாகின்றன.
முக்கிய பிரச்சினை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டிய முக்கியப் பிரச்சினை
இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், "நாம் பயிலும் பல பாடப்பிரிவுகள் மாணவர்களை வேலைக்கோ அல்லது சுயதொழில் தொடங்குவதற்கோ முழுமையாகத் தயார்படுத்துவதில்லை" எனக் கவலை தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவர் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்ற பிறகு, அடுத்த மேல்படிப்பிற்கு செல்வதைத் தவிர உடனடிப் பணிவாய்ப்பு கிடைப்பதற்கான தெளிவான வழிமுறைகள் இல்லை.
கல்வி நிறுவனங்கள் வெறும் பட்டங்களை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், வேலைவாய்ப்புத் திறன்களைக் கற்பிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு வேலை
அரசு வேலைகளுக்கான கடுமையான போட்டியும் அதன் பின்னணியும்
தனியார் துறைகளில் நேரடியாக பணியாற்றுவதற்கான நடைமுறை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான மாணவர்கள் அரசு வேலைகளை மட்டுமே தங்களின் ஒரே இலக்காகக் கொள்கின்றனர்.
2024 நவம்பர் முதல் 2025 ஜூலை வரையிலான காலத்தில் வெறும் 55,000 அரசுப் பணியிடங்களுக்கு 1.86 கோடி விண்ணப்பங்கள் குவிந்துள்ளது இதற்கு சான்றாகும்.
80 சதவீத மாணவர்கள் தங்களுக்குப் போதிய களப்பயிற்சி மற்றும் நேர்காணல் எதிர்கொள்ளும் பயிற்சி கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆயோக்
வேலைவாய்ப்பை அதிகரிக்க நிதி ஆயோக் வழங்கும் தீர்வுகள்
பட்டதாரிகள் எதிர்கொள்ளும் இந்த வேலைவாய்ப்பு சிக்கலுக்குத் தீர்வு காண பிழை இல்லாத பாடத்திட்டம், நவீன டிஜிட்டல் பயிற்சி மற்றும் வலுவான தொழிற்பயிற்சி காலம் அவசியம் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
வெறும் கல்விப் பட்டங்களை வழங்குவதோடு நிறுத்தாமல், தொழில் துறைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் மட்டுமே இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.