Loading...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் வீட்டில் சடலமாக மீட்பு: பின்னணி என்ன?
மம்தா பானர்ஜியின் உறவினர் வீட்டில் சடலமாக மீட்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் வீட்டில் சடலமாக மீட்பு: பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
04:43 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரான 28 வயது பிரிஷ்டி முகர்ஜி கட்டாக் செவ்வாய்க்கிழமை அன்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து உடனடியாகத் தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினர். மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, அவரது உடல் ராம்பூர்ஹாட் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விவரம்

தனிப்பட்ட நெருக்கடிகள் மற்றும் சட்ட சிக்கல்கள்

பிரிஷ்டி முகர்ஜி கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணி பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அரசு உதவி பெறும் பள்ளி பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர் தனது பணியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு

தொடரும் வழக்கு விசாரணைகள்

பிரிஷ்டி முகர்ஜியின் மர்ம மரணம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்த பிறகே அவரது இறப்பிற்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் தெரியவரும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ஆசிஷ் பானர்ஜி ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் வடு மாறுவதற்குள், மம்தா பானர்ஜியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் மரணமடைந்துள்ளது அப்பகுதியில் தீவிர விசாரணைக்கு வித்திட்டுள்ளது.

ADVERTISEMENT