வேல்ஸ் பல்கலைக்கழகம் வசம் சென்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி; அடுத்த கல்வியாண்டு முதல் புதிய நிர்வாகம்; முழு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
சென்னையின் அடையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ள போதிலும், அதன் விபரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சிறப்பாக நடத்தி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகம், தற்போது இந்த மகளிர் கல்லூரியையும் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.
பின்னணி
லதா ராஜேந்திரன் உருவாக்கிய கல்வி நிறுவனத்தின் பின்னணி
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகளும், ஜானகி ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினருமான லதா ராஜேந்திரன் என்பவரால் 1996 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது. பழைய சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில், வெறும் 70 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, தற்போது சுமார் 4,000 மாணவிகளைக் கொண்டு ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இங்கு 20 இளங்கலை மற்றும் 6 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன, மேலும் 160க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல்கலைக்கழக இணைப்பு
சென்னை பல்கலைக்கழக இணைப்பில் இருந்து விலகல்
இந்த நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, எம்ஜிஆர் ஜானகி கல்லூரியை சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இருந்து விடுவிப்பதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் சமீபத்தில் விவாதிக்கப்பட்டது. வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்படுவதால், வரும் கல்வியாண்டு முதல் இக்கல்லூரி வேல்ஸ் நிர்வாகத்தின் நேரடி ஆளுகைக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் பாடத்திட்டம் மற்றும் நிர்வாக முறைகளில் புதிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை
தற்போதைய மாணவிகளின் நிலை மற்றும் புதிய சேர்க்கை
தற்போது இக்கல்லூரியில் படித்து வரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாது. அவர்கள் ஏற்கனவே உள்ள சென்னை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் கீழேயே தங்கள் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெறுவார்கள். இருப்பினும், 2026-27 கல்வியாண்டு முதல் சேரும் முதலாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷின் தந்தை ஐசரி வேலன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.