தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்க பணிகளை துவங்க மத்திய அரசு எதிர்ப்புகளை மீறி டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தற்போது தேமுதிக கட்சியின் பொது செயலாளரான விஜயகாந்த் அவர்கள் இந்த விவகாரம் குறித்து தற்போது இணையத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
வீதியில் இறங்கி போராட்டம் செய்யவும் தேமுதிக தயங்காது - விஜயகாந்த்
மேலும், விவசாயிகள் மீது பற்று இருப்பதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு தற்போது அவர்களுக்கு எதிரான திட்டத்தினை அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் விவசாயிகளை ஒன்று திரட்டி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கோரி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து இது குறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்தால் மட்டுமே முடியும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.