டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு
இந்தியாவின் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்தொந்தரவு கொடுப்பதாகவும், இதனால் அவரது பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் டெல்லியில் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் தங்கள் போராட்டத்தினை துவங்கினர். இதுகுறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது டெல்லி ஜந்தர்மந்தரில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவுத்தெரிவிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், இந்தியாவுக்கே பெருமைத்தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, தங்கள் சுயமரியாதையினை காப்பற்றிக்கொள்ள போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது நெஞ்சைப்பதைக்கவைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.