ரூ.58 லட்சம் பாக்கி, திமுக போட்ட கடன்கள்! சட்டப்பேரவையில் சேகர்பாபு - அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெகவை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் கோயில்களில் நடத்தப்பட்ட குடமுழுக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலுவை நிதி குறித்து இரு தலைவர்களும் மாறி மாறித் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
கோயில் குடமுழுக்கு
கோயில் குடமுழுக்குகள் குறித்து சேகர்பாபு எழுப்பிய கேள்வி
விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, "திமுக ஆட்சிக் காலத்தில் 4,641 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தவெக அரசு அமைந்த பிறகு நடத்தப்பட்ட 281 குடமுழுக்குகளுக்கும் திமுக அரசு போட்ட விதையே காரணமாகும்.
தவெக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 3,000 கோயில்களுக்கான குடமுழுக்குகள், ஏற்கனவே திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்ட 12,630 கோயில்களுக்குள் அடங்குமா?" என கேள்வி எழுப்பினார்.
நிலுவைத் தொகை
ரூ.392 கோடி நிலுவைத் தொகை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்
சேகர்பாபுவின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், "கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,494 கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்காமல், சுமார் ரூ.392 கோடியைத் திரும்ப செலுத்தாமல் நிலுவையில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
சேகர்பாபு வெளியிட்ட 844 சட்டமன்ற அறிவிப்புகளில் 79 அறிவிப்புகள் நிதி ஆதாரமே இல்லாமல் தொடங்கப்படாமல் உள்ளன.
செயல்படுத்த முடியும் என்ற அளவிலான திட்டங்களை மட்டுமே நாங்கள் அறிவித்துள்ளோம்" எனக் கூறினார்.
நிதி பாக்கி
ரூ.58 லட்சம் பாக்கி மற்றும் பயனில்லாத திட்டங்கள் ரத்து
தொடர்ந்து பேசிய அமைச்சர், "500 பக்தர்கள் கூட வராத கோயில்களுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது போன்ற பயனில்லாத திட்டங்களைக் கண்டறிந்து ரத்து செய்துள்ளோம்.
அறநிலையத்துறை எந்த அளவுக்கு நிதிச்சுமையில் இருக்கிறது என்றால், தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்குத் தர வேண்டிய ரூ.58 லட்சம் நிலுவைத் தொகையைக் கூட அவர்கள் போன் செய்து கேட்கும் நிலையில் தான் முந்தைய அரசு துறையை விட்டுச் சென்றுள்ளது" எனச் சுட்டிக்காட்டினார்.
நிதி நிலைமை
நிதி நிலைமைக்கேற்ப திட்டங்களை செயல்படுத்த தவெக அரசு திட்டம்
திமுக ஆட்சியில் விட்டுச் செல்லப்பட்ட நிதியிழப்புகளையும் கடன்களையும் சரிசெய்து, மக்கள் பயன்பாட்டிற்குரிய திட்டங்களை மட்டுமே முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரமேஷ் பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.
கோயில்களின் மரபுகள் மற்றும் வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாத்து, நிலுவையில் உள்ள திருப்பணிகளைத் தடையின்றி முடிப்பதே தவெக அரசின் முதன்மை நோக்கம் எனக் கூறித் தனது பதிலுரையை நிறைவு செய்தார்.