மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி உத்தரவிட்ட நிலையில், மூடப்பட்ட அந்த கடைகளின் முழுமையான பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் உறுதியளித்தபடி, தற்போது மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒவ்வொரு கடையின் மாவட்டம், பகுதி, கடை எண் மற்றும் அதன் தெளிவான முகவரி ஆகியவை 1 முதல் 717 வரை வரிசை எண்களுடன் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரை கோட்டத்தில் 290 கடைகளும், கோவை கோட்டத்தில் 179 கடைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில் தலா 82 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 84 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பள்ளி கல்லூரி கோவில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முழு விவரம்https://t.co/gc0gW4abkK
— Vignesh TVK (@VigneshTvkCbe) August 20, 2026
பின்னணி
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னணி
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து - ரயில் நிலையங்களுக்கு அருகில், 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதன் மூலம் அரசுக்குச் சுமார் ₹11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கணித்தபோதிலும், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
பாட்டிலுக்கு ₹10 கூடுதல் கட்டணம் தடுப்பு நடவடிக்கை
கடந்த காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தேவையான இடங்களில் கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.