கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ். இந்த கடையில் நேற்று(நவ.,27)நள்ளிரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில் இன்று(நவ.,28)காலை தான் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த காட்டூர் காவல்துறையினர் அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் தங்கள் விசாரணையினை நடத்தியதாக தெரிகிறது. மேலும் மோப்ப நாய்கள் கொண்டு அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, ஒரே நபர் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளது காவல்துறை. இதனிடையே முதற்கட்ட விசாரணையில் கடையிலிருந்து 100 சவரனுக்கு மேலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.