Loading...
ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்: இடஒதுக்கீடு மற்றும் யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு
ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்

ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்: இடஒதுக்கீடு மற்றும் யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
07:27 am

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியில், ரிசர்வேஷன் ரீஃபார்ம் அந்தோலன் (Reservation Reform Andolan) என்ற அமைப்பின் சார்பில் திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய சமத்துவ விதிகள் மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினர் இணைந்து பலரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பொருளாதார அடிப்படை

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோரும் அமைப்புகள்

நீட் தேர்வுப் பயிற்சியாளர் ஹர்ஷ் துபே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ராஜஸ்தானை சேர்ந்த ஜெனரல் சேனா, சாணக்யா சேனா மற்றும் கர்ணி சேனா உள்ளிட்ட பல்வேறு பொதுப்பிரிவு அமைப்புகளும், சமூக ஊடகப் பிரபலங்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

சமுதாயத்தில் உண்மையில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு சலுகைகள் சென்றடையும் வகையில், சாதி அடிப்படையிலான தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியிடம் மனு அளிப்பதில் உறுதியாக இருந்த போராட்டக்காரர்கள்

போராட்டக் களத்தில் இருந்த ஹர்ஷ் துபே பேசுகையில், "எங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக சமர்ப்பிக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்" என உறுதியளித்தார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனுமன் சாலீசா பாராயணம் செய்தும், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ADVERTISEMENT

போலீஸ் பாதுகாப்பு

அனுமதி அளிப்பதில் எழுந்த குழப்பமும் பலத்த போலீஸ் பாதுகாப்பும்

போராட்டம் நடத்துவதற்கான அனுமதித் தொடர்பில் டெல்லி காவல்துறைக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே தொடக்கத்தில் பெரும் இழுபறி நீடித்தது.

போராட்டக்காரர்களை ராம்லீலா மைதானத்திற்கு செல்லுமாறு காவல்துறை முதலில் அறிவுறுத்திய போதிலும், அமைப்பாளர்கள் ஜந்தர் மந்தரிலேயே அமர்ந்து போராடுவதில் உறுதியாக இருந்தனர்.

இறுதியில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் பலத்த பாரிகேட் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

பிரச்சாரம்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவும் இடஒதுக்கீடு மறுசீரமைப்புப் பிரச்சாரம்

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகவே, நாக்பூர், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இதற்கான ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசு தங்களது கோரிக்கைகளை நேர்மறையாகப் பரிசீலிக்கத் தவறினால், வரும் நாட்களில் இந்த போராட்டத்தை நாடு தழுவிய அளவில் மேலும் தீவிரப்படுத்தப் போவதாக அமைப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இச்சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT