புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை புதிய தமிழகம் கட்சியினர் அம்மாவட்டங்களில் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியும் நிவாரண பணிகளை நேரில் ஆய்வுச்செய்து வருவதோடு, தாமும் களத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல்மற்றும் இருமல் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் பாளையங்கோட்டை சாந்தி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். மேலும் இவருக்கு கொரோனா உள்ளதா?என கண்டறியும் பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.