LOADING...
பஞ்சாபில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிஎஸ்எஃப் முகாம் அருகே பயங்கரம்
அடுத்தடுத்து நிகழ்ந்த வெடி விபத்துகள் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன (Representative Image)

பஞ்சாபில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிஎஸ்எஃப் முகாம் அருகே பயங்கரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
09:35 am

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களுக்கு அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த வெடி விபத்துகள் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 24 மணி நேரத்திற்குள் நடந்த இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மாநிலம் முழுவதும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், ஜலந்தரில் உள்ள பிஎஸ்எஃப் பஞ்சாப் பிராந்தியத் தலைமையகத்தின் நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த டெலிவரி ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஸ்கூட்டரின் உரிமையாளர் குர்பிரீத் சிங் என்பவர் பிஎஸ்எஃப் வளாகத்திற்குள் பார்சல் வழங்கச் சென்றிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டாவது குண்டுவெடிப்பு

அமிர்தசரஸ்: காசா முகாம் அருகே தாக்குதல்

ஜலந்தர் சம்பவத்தைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே, அமிர்தசரஸ் கிராமப்புறப் பகுதியில் உள்ள காசா ராணுவ முகாம் மற்றும் பிஎஸ்எஃப் முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே மற்றொரு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. மர்ம நபர்கள் சிலர் முகாமின் சுற்றுச்சுவரை நோக்கி ஏதோ ஒரு பொருளை வீசிவிட்டுச் சென்றதாகவும், அது வெடித்ததில் சுற்றுச்சுவரில் இருந்த தகடுகள் சேதமடைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இந்த இரட்டைச் சம்பவங்களைத் தொடர்ந்து குண்டு BDS மற்றும் FSL குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்துப் பேசிய காவல் ஆணையர்,"இது இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது சதி வேலையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

Advertisement