LOADING...
இந்தியா-பிரேசில் கூட்டணி: குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்; பிரதமர் மோடி பேச்சு
குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும் என பிரதமர் மோடி பேச்சு

இந்தியா-பிரேசில் கூட்டணி: குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்; பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
05:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்படும்போது, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான குளோபல் சவுத் குரல் சர்வதேச அரங்கில் அதிக தன்னம்பிக்கையுடனும் வலிமையுடனும் ஒலிக்கும் என்று தெரிவித்தார். சமகால சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

ஒத்துழைப்பு

5 முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு

பிரேசில் அதிபர் லுலாவின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையின் 20 வது ஆண்டைக் குறிக்கிறது. இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்துறை கூட்டாண்மை ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பயோடெக்னாலஜி மற்றும் விண்வெளி ஆய்வுகளில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்டிய அதிபர் லுலா, பிரேசிலுடன் இணைந்து செயல்படப் பல வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

விவசாயம்

விவசாயம் மற்றும் மருந்துத் துறையில் முன்னேற்றம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாயம் மற்றும் உயிரி உரங்கள் குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் மலிவு விலை மற்றும் உயர்தர மருந்துகளை பிரேசிலுக்கு அதிக அளவில் வழங்குவது குறித்து பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதுதவிர, முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம், ஒரு நிலையான சப்ளை செயினை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

வர்த்தக இலக்கு

வர்த்தக இலக்கு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு

இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இரு தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மோடி சுட்டிக்காட்டினார். அதேபோல், தீவிரவாதமும் அதற்கு ஆதரவளிப்பவர்களும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரிகள் என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Advertisement

டெல்லி

டெல்லியில் உற்சாக வரவேற்பு

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் லுலாவுக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அவரை வரவேற்றனர். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். பிரேசில் அதிபருடன் 300 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களும் இந்தியா வந்துள்ளது வர்த்தக ரீதியான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Advertisement