தனுஷ்கோடியில் ராமர் சேது பாலம் தொடங்கும் இடத்தில் பிரதமர் மோடி வழிபாடு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாட்களாக விரதம் இருந்து சடங்குகள் செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனைக்கு இன்று சென்றிருந்தார். பகவான் ராமர் இலங்கைக்கு செல்ல பாலம் அமைத்ததாக நம்பப்படும் இடத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்யும் பகவான் ராமர் தொடர்புடைய நான்காவது கோவில் இதுவாகும்.
திருவரங்க கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி
ராமாயணத்துடன் தொடர்புடைய புராதன ஸ்தலமான திருச்சியில் இருக்கும் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றிருந்தார். திருவரங்க கோவிலுக்கு சென்ற அவர், அங்கு வைத்து அறிஞர்களின் 'கம்ப' ராமாயண பாராயணத்தை கேட்டு ரசித்தார். ரசிகர்களின் கூட்டத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்தடைந்தார். அவரை காண்பதற்காக வழி நெடுக மக்கள் கூட்டம் கூடியது. இதற்கிடையில், பிரதமர் மோடியை நோக்கி கருப்பு பலூன்களை அசைத்ததாக கூறி மூன்று காங்கிரஸ் தொண்டர்கள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இராமாயணம் தொடர்புள்ள கோவில்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.