தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் 'H3N2' இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பரவி வரும் பாதிப்பில், காய்ச்சல் குறைந்தாலும் கூட, சுமார் 2 முதல் 3 வாரங்களுக்கு வறட்டு இருமல் நீடிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது Barking Cough எனப்படும் தீவிர இருமலாக உருவெடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இந்த வகை காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது பொது சுகாதாரத்துறை. "இவ்வகை பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனா வைரஸாக இருப்பினும், அது வீரியம் குறைந்த வைரஸ் என்பதால் அச்சப்பட வேண்டியதில்லை" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிந்துரைகள்
மருத்துவர்களின் பரிந்துரைகள்
ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால், அடுத்த சில நாட்களிலேயே குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும் அளவுக்கு இதன் வேகம் அதிகமாக உள்ளது. உருமாறிய கொரோனா உட்பிரிவுகளே இதற்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை கொரோனா காய்ச்சலை தொடர்ந்து வரும் வறட்டு இருமல் நான்கு முதல் 8 வாரங்கள் ஒருவரை தாக்குகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், காய்ச்சல் மற்றும் இருமலுக்காக மக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் 'ஆன்டிபயாடிக்' (Antibiotics) மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது வைரஸ் தொற்று என்பதால், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகளை எடுப்பது பக்கவிளைவுகளை உண்டாக்கும். உடல் சோர்வைத் தவிர்க்க அதிகப்படியான திரவ உணவுகள் மற்றும் இளஞ்சூடான குடிநீரை பருக வேண்டும்