இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'கடுமையான வறுமையற்ற மாநிலம்' என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்
செய்தி முன்னோட்டம்
மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவிலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல் மாநிலமாகவும், உலகளவில் சீனாவுக்குப் பிறகு இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பகுதியாகவும் கேரளா உருவெடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் மாநில அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒரு நபர் உணவு, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற மிக அடிப்படையான மனிதத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலையை "கடுமையான வறுமை" என்று வரையறுக்கிறது உலக வங்கி.
நிதி ஆயோக்
நிதி ஆயோக் குறியீடு
நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டிலேயே, கேரளாவில் பல பரிமாணங்களில் வறுமையில் உள்ள குடிமக்களின் பங்கு 0.55% ஆகக் குறைந்திருந்தது. இது நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாகும். கேரளாவின் இந்தச் சாதனைப் பயணம், 2021 இல் தொடங்கப்பட்ட 'கடுமையான வறுமை ஒழிப்புத் திட்டம்' மூலம் தொடங்கியது. இந்தக் கொடிய வறுமையில் வாழும் ஒவ்வொரு வீட்டையும் அடையாளம் காண்பது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. குடும்பஸ்ரீ பணியாளர்கள், ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று நடத்திய விரிவான ஆய்வில், 64,006 குடும்பங்கள் (1,30,009 நபர்கள்) கடுமையான வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான தீர்வுகளை வழங்கியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.