ஒடிசாவில் பரபரப்பு: ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
செய்தி முன்னோட்டம்
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வர் நோக்கிப் புறப்பட்ட இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் விபத்துக்குள்ளானது. ஒன்பது இருக்கைகள் கொண்ட இந்த விமானம், ரூர்கேலாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் ஒரு விமானி மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் ஏழு பேர் இருந்தனர். ரூர்கேலாவிலிருந்து சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரையும் மீட்டனர்.
சிகிச்சை
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இயந்திரக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புவனேஸ்வரிலிருந்து சுற்றுலாத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். விபத்தைத் தொடர்ந்து ரூர்கேலா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை வெளியான பின்னரே விபத்து குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.