ஐஐடியில் இனி டாக்டராகலாம்! பிஜி மெடிக்கல் படிப்பைத் தொடங்கும் முதல் ஐஐடி; முதற்கட்டமாக 20 இடங்களுக்கு விண்ணப்பம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை எடுத்துள்ளது. இதற்காகத் தேசிய மருத்துவ ஆணையத்திடம் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் சுமன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், இந்தியாவில் முதுகலை மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை காரக்பூர் ஐஐடி பெறும்.
20 இடங்கள்
20 இடங்களுடன் தொடங்கும் எம்டி படிப்பு
இந்தத் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 20 இடங்களுடன் முதுகலை மருத்துவப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கான அனைத்து நடைமுறைகளையும் ஐஐடி காரக்பூர் நிர்வாகம் நிறைவு செய்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் இதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இறுதி முடிவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் எடுக்கவுள்ளது.
மாணவர்கள்
மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் மருத்துவமனைகள்
இந்த மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு டாக்டர் பி.சி.ராய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் சியாம பிரசாத் முகர்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், சியாம பிரசாத் மருத்துவமனையை 220 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் எளிதாகக் கிடைக்கும்.
சேர்க்கை
மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர்கள் நியமனம்
இந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் படிப்பைக் கற்பிப்பதற்காக ஏற்கனவே 20 அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடங்குவது குறித்த கால அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
விதிமுறைகள்
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள்
இதற்கிடையில், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான புதிய விதிமுறைகளைத் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பேராசிரியர்கள் முழுநேரப் பணியாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் அலுவலக நேரத்தின் போது தனியார் மருத்துவப் பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது. மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் பேராசிரியர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.