டெல்லிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்! செங்கோட்டை, சாந்தினி சௌக் கோவில்களில் குண்டுவெடிப்புக்குச் சதியா? உளவுத்துறை கொடுத்த பகீர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி 21, 2026 (சனிக்கிழமை) அன்று இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை தகவல்களின்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புகளை காரணம்காட்டி பழிவாங்கும் நோக்கில், இந்தியாவில் பெரிய அளவிலான ஐஇடி குண்டுவெடிப்புகளை நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதி செய்கிறது. டெல்லி மட்டுமின்றி, இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களும் இந்த பயங்கரவாத அமைப்பின் இலக்கில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு முகமைகள் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்: செங்கோட்டை, மெட்ரோ நிலையங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களில் சிசிடிவி மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் முக்கிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வேண்டுகோள்
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
பொதுமக்கள் எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை என்றும், அதேசமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொது இடங்களில் உரிமை கோரப்படாத பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2025 நவம்பர் மாதம் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.