டெல்லியில் காற்று மாசு படுமோசம்! மீண்டும் அமலுக்கு வந்த 'GRAP-4' கட்டுப்பாடுகள்; பள்ளிகள் மூடல், வாகனங்களுக்குத் தடை
செய்தி முன்னோட்டம்
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (NCR) காற்று மாசு அளவானது (AQI) சனிக்கிழமை (ஜனவரி 17) மாலை 'மிகவும் மோசமான' (Severe) நிலையை எட்டியது. மாலை 4 மணிக்கு 400 ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, இரவு 8 மணியளவில் 428 ஆக உயர்ந்தது. இதைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) உடனடியாக மிகக் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான GRAP-4 (Graded Response Action Plan Stage IV) கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
பள்ளிகள்
பள்ளிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
காற்று மாசு அதிகரித்துள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கப் பள்ளிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டு, அவர்கள் ஆன்லைன் மூலம்கல்வி பயில அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்தால் 6 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நீட்டிக்கப்படலாம். இருப்பினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரடி வகுப்புகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடை
வாகனங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை
GRAP-4 அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி லாரிகள் தவிர, மற்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்கள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் மின் இணைப்புகள் போன்ற பொதுத் திட்டங்கள் உட்பட அனைத்து விதமான கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஊழியர்கள்
ஊழியர்களுக்கு 'வொர்க் ஃபிரம் ஹோம்' பரிந்துரை
அலுவலகங்களுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களில் 50 சதவீதத்தினரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைவு போன்ற வானிலை மாற்றங்களே இந்தத் திடீர் மாசு அதிகரிப்பிற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுமக்கள் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.