வெற்றிப் பயணம் திட்டம்: அக்டோபர் 2 முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு, திருநங்கையருக்கு இலவச பயணம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயண வசதியை வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது பெண் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தில் அவர்கள் தடையின்றிப் பங்கேற்பதிலேயே உள்ளது என்று குறிப்பிட்டார். தற்போது செயல்பாட்டில் உள்ள கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் 40 கிலோமீட்டருக்குள் பயணிக்கும் நகரப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி உள்ள நிலையில், அந்த எல்லையை விரிவுபடுத்துவது அவசியமாகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வெற்றிப் பயணம்
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 24, 2026
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு#CMJosephVijay pic.twitter.com/dwpxr580rg
விவரங்கள்
எந்தெந்தப் பேருந்துகளில் இலவச பயணம்?
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.
அதோடு, புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் கிடையாது.
இத்திட்டத்தில் பயன்பெற வருமான வரம்பு உள்ளிட்ட எந்தவித முன்நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேருந்துகளில் திருநங்கையரும் இலவசமாக பயணிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களும் போக்குவரத்து வசதியின்மை அல்லது செலவினங்கள் காரணமாகத் தங்களின் வாழ்வாதார வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.