அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (Digital DL) வழங்கும் சேவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் பதிவுச் சான்றிதழை (Digital RC) இணையவழியில் நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும், எந்த இடத்திலும் பதிவு மற்றும் லைசென்ஸ் பெறக்கூடிய வசதிகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
வழக்குகள் ரத்து
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் வழக்குகள் முழுமையாக ரத்து
கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், தங்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது முந்தைய திமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் மனிதநேய அடிப்படையில் திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பரந்தூர் புதிய விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chief Minister Joseph Vijay has announced that all cases filed against farmers and teachers during the DMK regime will be withdrawn. pic.twitter.com/IIgfloDjqn
— Vignesh Theni (@Vignesh_twitz) September 2, 2026
நகர்ப்புற உட்கட்டமைப்பு
நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புற மேம்பாடுகள்
மாநிலத்தின் பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்காகப் பல நூறு கோடிகளில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்த ரூ. 305 கோடியில் 250 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ரூ. 335 கோடியில் புதிய பள்ளி வகுப்பறைகளும், சிதம்பரம் நடராஜர் கோயில் ரத வீதிகளை ரூ. 36 கோடியில் தரைவழி கேபிள்கள் மூலம் நவீனப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.