1981 முதல் அரியர் வைத்த மாணவர்கள் பட்டம் பெற அரிய வாய்ப்பு; சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம், அரியர் வைத்த மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1981-82 கல்வி ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தொலைதூரக் கல்வியில் சேர்ந்து, பருவத் தேர்வுகளில் (அரியர்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தங்கள் பட்டத்தைப் பெறுவதற்காக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத ஒரு கடைசி வாய்ப்பை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் சுமார் 37 ஆண்டுகள் வரை அரியர் வைத்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதிப் பட்டம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்த அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொலைதூரக் கல்விப் பிரிவு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் பிரிவு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் பிரிவு, நேரடி வகுப்புகள் தொடர முடியாதவர்கள், வேலை செய்து கொண்டே படிக்க விரும்புபவர்கள் எனப் பலதரப்பட்ட மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 73 வகையான படிப்புகளை வழங்கி வருகிறது. பட்டம் பெற்ற குறிப்பிட்ட கால அவகாசத்தில் அரியர் தேர்வுகளை எழுதத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் தேர்வை எழுத ஆர்வமுள்ள மாணவர்கள், திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள் தங்களது படிப்பின் விவரங்களை உறுதி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.