சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி உட்பட 40 கேள்விகள்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீட்டு பணிக்காக, தனிநபர்களின் சாதி உட்பட 40 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) முறைப்படி அறிவித்துள்ளது. இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை 1948 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டாம் கட்டப் பணிகள் லடாக், ஜம்மு காஷ்மீரின் பனிப்பொழிவு பகுதிகள், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 17 முதல் தொடங்குகின்றன. நாட்டின் பிற மாநிலங்களில் 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது.
முதல்முறை
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சாதி கணக்கெடுப்பு
இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்கு பிறகு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் சேகரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
வினாத்தாளின் 10வது கேள்வியாக சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் என்ற பிரிவுகளுடன், தனிநபர் தெரிவிக்கும் சாதியை அப்படியே பதிவு செய்யும் திறந்தநிலை வடிவம் பின்பற்றப்பட உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு சாதி கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளித்தது.
பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயின் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படுபவை
சேகரிக்கப்படும் தனிநபர் மற்றும் குடும்ப விவரங்கள்
இந்த கணக்கெடுப்பில் பெயர், குடும்பத் தலைவருடனான உறவு, பாலினம், பிறந்த தேதி, திருமண நிலை, தேசிய இனம், மாற்றுத்திறனாளி விவரம், தாய்மொழி, பிற மொழிகள் மற்றும் மதம் ஆகியவை கேட்கப்பட உள்ளன.
முதன்முறையாக தாய் மற்றும் தந்தை குறித்த விவரங்களை தனித்தனியாகச் சேகரிக்க இரண்டு தனித்தனி கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி, டிஜிட்டல் எழுத்தறிவு நிலை, பணிநிலை, பொருளாதார நடவடிக்கை, தொழிலின் தன்மை, வேலைக்காகப் பயணம் செய்யும் விவரங்கள் மற்றும் இடப்பெயர்வுக்கான காரணங்கள் குறித்தும் விரிவான தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
கணக்கெடுப்பு
புதிய வினாக்கள் மற்றும் டிஜிட்டல் கணக்கெடுப்பு
இம்முறை புதிய அம்சங்களாகக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடம், வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் வழங்கலாம்.
2021 இல் நடைபெற வேண்டிய இக்கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது டிஜிட்டல் முறையில் கைபேசி செயலி மூலம் இத்தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்துத் தரவுகளும் 2027 மார்ச் 1க்குள் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Ministry of Home Affairs (MHA) today notified a set of 40 questions, instructing that the Census officers, within the limits of the local area for which they have been respectively appointed, will ask all such questions for collecting information through the Household Schedule in… pic.twitter.com/uINp9FlVpZ
— ANI (@ANI) August 14, 2026