'ஹாலிவுட் படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடிப்பேன்!' மகாராஜா 2 அப்டேட் கொடுத்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெற்ற பத்தா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இயக்குனர் நிதிலன் சாமிநாதன் எழுதியுள்ள இரண்டாம் பாகத்தின் கதை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். ஆரம்பத்தில் மகாராஜா படத்தை பலர் நம்பாதபோதும், தமக்கு அதன் மீது முழு நம்பிக்கை இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இலவசமாக நடிக்கத் தயார்
ஹாலிவுட் ரீமேக்கில் இலவசமாக நடிக்கத் தயார் எனக் கூறிய விஜய் சேதுபதி
மகாராஜா படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது குறித்தும் விஜய் சேதுபதி விழாவில் மகிழ்ச்சியுடன் பேசினார்.
"ஹாலிவுட் ரீமேக் செய்தி உண்மையா எனத் தயாரிப்பாளரிடம் கேட்டேன்.
அதில் எனக்கு சிறிய கதாபாத்திரம் கொடுத்தால் கூடக் பைசா சம்பளம் வாங்காமல் இலவசமாக நடிக்கத் தயார் எனக் கூறினேன்." என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
ஹாலிவுட் திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், தனது படம் அங்கு செல்வது பெருமையளிக்கிறது என்றும் கூறினார்.
பிரமாண்ட வெற்றி
ஹாலிவுட் மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளின் பிரமாண்ட வெற்றி
சீனாவில் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ரூ.91 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, ஹாலிவுட் நிறுவனம் ஒன்று இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இந்த ஹாலிவுட் ரீமேக்கில் முன்னணி நடிகர் மேத்யூ மெக்கானாகே முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மேலும், இதன் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் ஆமீர் கான் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வசூல் சாதனை
உலகளவில் ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்த மகாராஜா
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024-இல் வெளியான மகாராஜா ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், காணாமல் போன குப்பைத் தொட்டியை தேடும் ஒரு சாதாரண சவரத் தொழிலாளியின் கதையாக உருவாக்கப்பட்டது.
அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வரை வசூலித்தது.
ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.