நடத்துநராக தான் பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு திடீரென சென்ற நடிகர் ரஜினிகாந்த்
இன்று உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் சினிமாவுலகிற்கு நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரில் பேருந்து நடத்துநராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் அண்மையில் தான் நடத்துநராக பணியாற்றிய ஜெயநகர போக்குவரத்து டிப்போவிற்கு திடீரென சென்றுள்ளார். அவரை அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, அவருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். ரஜினியும் மிக இயல்பாக அங்கிருந்த ஊழியர்களோடு கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்த வீடியோப்பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் தற்போது வசூல் மழையினை பொழிந்துவரும் நிலையில் ரஜினி, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தினை நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.