'ஜார்ஜ்குட்டி' மீண்டும் வருகிறார்! திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மலையாள திரையுலகின் மாபெரும் வெற்றி திரைப்படமான 'திரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம், வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இத்திரைப்படம் குறித்த மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தகவலைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவான 'திரிஷ்யம்' மற்றும் 'திரிஷ்யம் 2' ஆகிய இரண்டு பாகங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளைப் படைத்தன. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதை சுருக்கம்
கதையின் சுருக்கம் மற்றும் ரீமேக் விவரங்கள்
திரிஷ்யம் படத்தின் மையக்கரு, தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சாமானிய மனிதன் செய்யும் சட்டப்போராட்டமே ஆகும். தற்செயலாக ஒரு கொலையைச் செய்யும் தன் குடும்பத்தைக் காக்க, சினிமா அறிவைப் பயன்படுத்தி நாயகன் ஜார்ஜ்குட்டி புத்திசாலித்தனமாக ஒரு பொய்யான ஆதாரத்தை (Alibi) உருவாக்குகிறான். காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருந்து தப்பிக்க, குறிப்பிட்ட தேதியில் தாங்கள் வேறொரு இடத்தில் இருந்ததாக சாட்சிகளை நம்ப வைக்கிறான். இறுதியில், தன் அறிவாற்றலால் சட்டத்தின் பிடியில் இருந்து குடும்பத்தை மீட்பதே இப்படத்தின் சுருக்கமாகும். இந்த படத்தின் முதல் பாகம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.