கைதி 2 கைவிடப்பட்டதா?- மௌனம் கலைத்த லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கைதி 2' திரைப்படம் தாமதமாவது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தார். 'கைதி 2' திட்டம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்த லோகேஷ், அப்படத்தின் தாமதத்திற்கு சம்பள உயர்வு காரணம் அல்ல என்று தெளிவுபடுத்தினார். 46 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரு பெரும் ஆளுமைகளை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டதாகவும், ஆனால், அந்த கதை அவர்கள் இருவருக்கும் தற்போது செட் ஆகாததால் அந்த முயற்சி தற்காலிகமாக நின்றது. கமல்-ரஜினி படம் தள்ளிப்போன சூழலில், நடிகர் கார்த்தி ஏற்கனவே தனது தேதிகளை வேறு படங்களுக்கு ஒதுக்கியிருந்ததால், 'கைதி 2' பணிகளை உடனே தொடங்க முடியவில்லை எனவும் கூறினார்.
AA23
அல்லு அர்ஜுன் உடன் இணைந்ததன் காரணம்
கைதி 2 மற்றும் தலைவர் 173 ஆகிய படங்கள் எதிர்பார்த்த நேரத்தில் தொடங்கப்படாததால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு தான் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அல்லு அர்ஜுன் நடிக்கும் 'AA23' படத்தை முதலில் இயக்க முடிவெடுத்ததாக லோகேஷ் தெரிவித்தார். அல்லு அர்ஜுன் படத்தை முடித்த கையோடு, 2027-ஆம் ஆண்டில் 'கைதி 2' படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார். அத்துடன் சூர்யாவின் 'ரோலக்ஸ்' (Rolex) கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு தனித் திரைப்படம் உருவாகி வருவதையும் அவர் உறுதி செய்துள்ளார். இதனால் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.