ஜனநாயகன் ரிலீஸில் புதிய சிக்கல்; உச்ச நீதிமன்றத்தை நாடிய சென்சார் போர்டு
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்ததையடுத்து, அந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்ஷன்ஸ் (KVN Productions) உச்ச நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருந்தது.
மனு
சென்சார் போர்டின் மனு காரணமாக மேலும் தாமதாகும் ரிலீஸ்
தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதை முன்கூட்டியே கணித்த தணிக்கை வாரியம், அங்கு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், "தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது" என்று சென்சார் போர்டு கோரியுள்ளது. கடந்த ஜனவரி 9-ம் தேதியே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய இந்தப் படம், இந்தச் சான்றிதழ் சிக்கல்களால் காலவரையறையின்றி தள்ளிப்போயுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.