செயற்கை பன்னீருக்குத் தடை: உணவகங்களுக்கு Zomato எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தனது செயலியில் செயற்கை பால் பொருட்கள் (Analogue Dairy Products) மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை விற்க பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இந்த விதியை மீறும் உணவகங்கள் சொமேட்டோ தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தங்களது மெனுவில் செயற்கை பால் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அறிவித்திருந்த உணவுகள் அனைத்தும் சொமேட்டோ தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
Zomato-வின் புதிய கட்டுப்பாடுகள்
Zomato நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உணவகங்கள் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பால் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; உடனடியாக மாற்ற முடியாத உணவுகளை மெனுவிலிருந்து நீக்க வேண்டும்.
மேலும், உணவகங்கள் தங்களுக்கு விநியோகம் செய்யப்படும் பால் பொருட்களின் லேபிள்கள் மற்றும் மூலப்பொருட்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இது குறித்து சொமேட்டோ CEO ஆதித்யா மங்லா, "அனைவருக்கும் தரமான உணவு வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கம். வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், எங்களது உணவகப் பங்காளிகள் வழங்கும் உணவில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
பின்னணி
ஏன் இந்த 'செயற்கைப் பால் பொருட்கள்' தடை?
இயற்கையான பால் கொழுப்பு மற்றும் பால் புரதத்திற்குப் பதிலாக, தாவர எண்ணெய்கள், சோள மாவு, தாவர புரதங்கள் மற்றும் ரசாயனச் சேர்க்கைகள் ஆகியவற்றை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படும் பொருட்களே 'அனலாக் டைரி' எனப்படும்.
செயற்கை பால் பொருட்களை 'பன்னீர்' என்ற பெயரில் விற்பனை செய்வது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் படி சட்டவிரோதமாகும் என FSSAI தெளிவுபடுத்தியுள்ளது.
பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு செயற்கைப் பன்னீர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மகாராஷ்டிர அரசு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது.
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 35.4% அனலாக் பன்னீர் மாதிரிகள் பாதுகாப்பற்றவை மற்றும் தரம் குறைந்தவை என ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.