பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஸிரோதா நிறுவனர் நிதின் காமத்; காரணம் என்ன?
ஸிரோதாவின் (Zerodha) நிறுவனர் நிதின் காமத், இன்று தனது சமூக வலைதளத்தில் இட்ட பதிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு அவர் லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதற்கான காரணத்தை அவர் நேரடியாக கூறவில்லை என்றாலும், பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியமான காரணிகளை பட்டியலிட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அவை அனைத்தும் சேர்ந்தோ தனக்கு பக்கவாதம் ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் பதிவிட்டிருந்தார். 6 வாரங்களுக்கு முன்பு, நிதின் தனது முகத்தில், தொய்வை கவனித்ததாகவும், அதோடு, வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரமப்பட்டதாகவும் குறிப்பிட்டார். உடனடியாக மருத்துவரை அணுகியபோதுதான், தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்ததாக கூறினார். தான் முழுமையாக குணமடைய 3-6 மாதங்கள் ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.