LOADING...
எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 8% சரிவு: எல்ஐசி மற்றும் முதலீட்டாளர்களுக்கு ₹1 லட்சம் கோடி நஷ்டம்! பின்னணி என்ன?
எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 8% சரிவு

எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 8% சரிவு: எல்ஐசி மற்றும் முதலீட்டாளர்களுக்கு ₹1 லட்சம் கோடி நஷ்டம்! பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
02:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கியின் மதிப்புகள் மற்றும் அறநெறிகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டது, முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கியின் கார்ப்பரேட் நிர்வாகம் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இன்று (மார்ச் 19) காலை வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 8% வரை சரிந்து, 52 வார கால குறைந்தபட்ச விலையான ₹772 ஐத் தொட்டது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

இழப்புகள்

முதலீட்டாளர்கள் சந்தித்த பெரும் இழப்புகள்

வங்கியின் பங்குகள் சரிந்ததால் பல்வேறு தரப்பு முதலீட்டாளர்களும் சந்தித்துள்ள தோராயமான இழப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் 47.70% பங்குகளை வைத்துள்ள அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு, இன்று ஒரே நாளில் ₹45,072 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் முதலீடு செய்தவர்களுக்கு மொத்தம் ₹25,209 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாதாரணப் பொதுமக்களான சில்லறை முதலீட்டாளர்களுக்கு ₹8,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கு மட்டும் ₹4,510 கோடி சொத்து மதிப்பு குறைந்துள்ளது. சிங்கப்பூர் அரசுக்கு ₹2,150 கோடி நஷ்டமும், நார்வே நாட்டின் இறையாண்மை நிதியத்திற்கு ₹1,151 கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

விளக்கம்

நிர்வாகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் விளக்கம்

இந்தத் திடீர் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்க எச்டிஎஃப்சி வங்கியின் இடைக்காலத் தலைவர் கேகி மிஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். வங்கிக்குள் எவ்வித அதிகாரப் போட்டியும் இல்லை என்றும், பதவி விலகிய தலைவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்டிஎஃப்சி வங்கி நிதி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் வலுவாக இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் உறுதி அளித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது, எச்டிஎஃப்சி வங்கியின் போக்கு தற்போது பலவீனமாகவே உள்ளது. பங்கின் விலை ₹750க்கு கீழ் சென்றால் வீழ்ச்சி அதிகரிக்கலாம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ₹850 அளவைத் தாண்ட வேண்டும்.

Advertisement