8வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு! சம்பளம், ஓய்வூதிய உயர்வு எப்போது?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு வரைபடம் தற்பொழுது வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவையால் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த ஆய்வு வரம்புகள் (Terms of Reference), ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், படிகள் மற்றும் பிற சலுகைகள் குறித்து இந்த ஊதியக் குழு என்னென்ன பரிந்துரைகளை ஆராய வேண்டும் என்பதைத் தெளிவாக விவரித்துள்ளது. இந்த புதிய ஊதியக் குழுவின் முடிவுகள், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குப் பயனளிக்கவுள்ளது. இதில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறை ஊழியர்களும் அடங்குவர்.
காலக்கெடு
ஊதியக் குழுவின் கட்டமைப்பு மற்றும் காலக்கெடு
இந்த 8வது ஊதியக் குழுவானது ஒரு தலைவர், ஒரு பகுதிநேர உறுப்பினர் மற்றும் ஒரு உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்ட தற்காலிக அமைப்பாகச் செயல்படும்.
இந்த குழு தனது இறுதிப் பரிந்துரைகளை அது அமைக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் இடைக்கால அறிக்கைகளையும் இந்த குழு சமர்ப்பிக்கலாம்.
தங்களது முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள், நிதி நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகள் ஆகியவற்றை இந்த குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீர்திருத்தங்கள்
சம்பளம் மற்றும் படிகளில் வரப்போகும் சீர்திருத்தங்கள்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் மற்றும் படிகளில் பெரிய அளவிலான மாற்றங்களை இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது:
புதிய ஊதியக் கட்டமைப்பு மற்றும் பே மேட்ரிக்ஸ் (Pay Matrix) மறுஆய்வு.
அகவிலைப்படி (DA), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) போன்ற படிகளின் சீர்திருத்தம்.
திறமையான ஊழியர்களை ஈர்க்கும் வகையில் நவீன பணியிடத் தேவைகளுக்கு ஏற்ப ஊதியத்தை மாற்றியமைத்தல்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள போனஸ் திட்டங்களை ஆய்வு செய்து, தனிநபரின் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (Performance-linked incentives) முறையை அறிமுகப்படுத்துதல்.
தற்போது புழக்கத்தில் உள்ள ஏராளமான இதர படிகளை முறைப்படுத்தி, அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
முக்கிய ஆய்வுகள்
ஓய்வூதிய முறைகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய ஆய்வுகள்
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றின் கீழ் வரும் ஊழியர்களுக்கான மரணம் மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை (Death-cum-Retirement Gratuity) விதிகளை இந்தக் குழு விரிவாக ஆய்வு செய்யவுள்ளது.
மேலும், என்பிஎஸ் (NPS) வரம்பிற்குள் வராத ஊழியர்களின் கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியச் சலுகைகளும் மறு ஆய்வு செய்யப்படவுள்ளன.
லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஓய்வூதியப் பலன்களில் வரப்போகும் மாற்றங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஊழியர்கள்
யாரெல்லாம் இந்த 8வது ஊதியக் குழுவின் கீழ் வருவார்கள்?
இந்தக் குழுவின் புதிய பரிந்துரைகள் பரந்த அளவிலான அரசு ஊழியர்களுக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
தொழில் துறை மற்றும் தொழில் அல்லாத பிரிவுகளை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள்.
அகில இந்திய சேவைகள் (All India Services) மற்றும் பாதுகாப்புப் படைப் பணியாளர்கள்.
யூனியன் பிரதேச ஊழியர்கள் மற்றும் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள்.
நாடாளுமன்ற சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் ஊழியர்கள் (ஆர்பிஐ தவிர).
உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கீழ் வரும் கீழ்மை நீதிமன்றங்களின் நீதித்துறை அதிகாரிகள்.