LOADING...
மேற்கு துருக்கியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன, உயிர் சேதம் இல்லை
ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்த சில கட்டிடங்களைச் சரித்தது

மேற்கு துருக்கியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன, உயிர் சேதம் இல்லை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
03:19 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு துருக்கியின் பாலிகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்திர்கி (Sindirgi) நகரத்தை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 27, 2025) 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நடுக்கம், ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்த சில கட்டிடங்களைச் சரித்தது. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 10:48 மணிக்கு (1948 GMT) ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் சுமார் 5.99 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த தகவலின்படி, உடனடி உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பீதியால் தவறி விழுந்ததில் 22 பேர் காயமடைந்தனர்.

சேதங்கள்

அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம்

நிலநடுக்க மையமான சிந்திர்கியில், ஏற்கனவே சேதமடைந்த நிலையில் இருந்த குறைந்தது மூன்று ஆளில்லா கட்டிடங்களும் ஒரு இரண்டு மாடிக் கடையும் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மையப்பகுதியில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல், அத்துடன் பர்சா, மனிசா மற்றும் சுற்றுலாத் தலமான இஸ்மிர் உள்ளிட்ட பல மாகாணங்களில் உணரப்பட்டது. தேசிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) உடனடியாக கள ஆய்வுகளைத் தொடங்கியது. மழை பெய்ய தொடங்கியதால், வீடுகளுக்குத் திரும்ப அஞ்சிய மக்களுக்காக பள்ளிவாசல்கள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்குகள் திறக்கப்பட்டு அடைக்கலம் அளிக்கப்பட்டது. துருக்கி பல முக்கிய பூகம்ப பிளவு கோடுகளின் மீது அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.