LOADING...
"25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நியூசிலாந்து காரர் கொடுத்த மஃப்ளர்..." பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி
பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

"25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நியூசிலாந்து காரர் கொடுத்த மஃப்ளர்..." பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
03:38 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய வம்சாவளி மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். இருநாடுகளுக்கு இடையேயான உறவு என்பது நட்பு, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வலுவான எதிர்காலத்திற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், நியூசிலாந்தின் கலாச்சாரப் பாரம்பரிய சொல்லான 'வகா' (Waka) என்பதன் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்தியா - நியூசிலாந்து

'வகா' படகும் இந்தியா - நியூசிலாந்தின் புதிய பயணமும்

நியூசிலாந்தில் பல நூற்றாண்டுகளாக மக்களை ஒன்றிணைக்கும் குறியீடாக விளங்கும் 'வகா' என்பது வெறும் கேனோ (Canoe) என்ற சாதாரணப் படகு மட்டுமல்ல, அது இருநாடுகளின் பகிரப்பட்ட கூட்டுப் பயணத்தின் சின்னம் என்று பிரதமர் மோடி விவரித்தார். "இன்று இந்தியா - நியூசிலாந்து எனும் 'வகா' ஒரு புதிய கூட்டுப் பயணத்தைத் தொடங்க முழுத் தயாராக உள்ளது. நமக்கு முன்னால் அசாத்தியமான வாய்ப்புகள் குவிந்துள்ளன, தற்போதைய காற்றும் நமக்கு சாதகமாகவே வீசுகிறது." என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய மாலுமிகள்

நியூசிலாந்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் இந்திய மாலுமிகள்

இந்த வரலாற்றுப் பயணத்தின் வெற்றி குறித்து தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், "இதற்குக் காரணம் மோடி அல்ல, மாறாக இந்த தங்கமயமான நூற்றாண்டின் உண்மையான மாலுமிகள் நீங்கள்தான்" என்று இந்திய வம்சாவளியினரைப் பார்த்து புகழாரம் சூட்டினார். ஆக்லாந்து முதல் வெலிங்டன் வரையிலும், கிரைஸ்ட்சர்ச் முதல் குயீன்ஸ்டவுன் வரையிலும் நியூசிலாந்தின் ஒவ்வொரு மூலையிலும் பரவி வாழும் இந்திய சமூகமே இந்த பயணத்தின் உண்மையான மாலுமிகள் என்றார்.

Advertisement

நியூசிலாந்து

இந்தியத் திறமைகளையும் நகரப் பெயர்களையும் போற்றும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாடு இந்தியத் திறமைகளுக்கு அளிக்கும் அங்கீகாரத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, ஏர் நியூசிலாந்தின் சிஇஓவாக நிகில் ரவிசங்கர் இருப்பதையும், ஆனந்த் சத்யானந்த் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்ததையும் சுட்டிக்காட்டினார். மேலும், கிரிக்கெட் அணியில் ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, அஜாஸ் படேல் போன்ற திறமையாளர்கள் ஜொலிப்பதையும், நியூசிலாந்தின் வீதிகளுக்கு கந்தாலா, பாம்பே ஹில்ஸ், கல்கத்தா, டெல்லி, அமிர்தசரஸ் போன்ற இந்திய நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Advertisement

பழைய நினைவுகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய மஃப்ளரும் இருதரப்பு அரசியல் ஆதரவும்

தனது உரையின் போது, 25-30 ஆண்டுகளுக்கு முன்பு தான் எந்தவொரு அரசாங்கப் பதவியிலும் இல்லாத காலத்தில் நியூசிலாந்து வந்தபோது, ஒரு உள்ளூர் நபரால் தமக்குக் பரிசளிக்கப்பட்ட மஃப்ளர், தொப்பி மற்றும் கையுறைகள் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அதில் தான் இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வரும் மஃப்ளரை மேடையில் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இறுதியாக, இந்த நிகழ்வில் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் மற்றும் தொழிற்கட்சி உறுப்பினர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இது இந்தியா - நியூசிலாந்து உறவுக்கு அங்குள்ள அனைத்துக் கட்சிகளிடையேயும் இருக்கும் ஆதரவைக் காட்டுவதாகக் கூறினார்.

Advertisement