வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் சிலர் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் தூக்கிலிட அச்சுறுத்தியதால் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்நாட்டின் சக்திவாய்ந்த கிரிமினல் குழுக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா செவ்வாயன்று உத்தரவிட்டார். ஈக்வடாரின் மிகவும் சக்திவாய்ந்த கிரிமினல் ரவுடிகளில் ஒருவர் சிறையில் இருந்து தப்பியதோடு நாட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார். அதனையடுத்து, உள்நாட்டு மோதல் என்ற அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோவா இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
30 நிமிடத்திற்கு மேல் நடந்த தாக்குதல்
கொலம்பியாவிற்கும் பெருவிற்கும் இடையே அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், சமீப ஆண்டுகளாக வன்முறை அதிகரித்து வருகிறது. மெக்சிகன் மற்றும் கொலம்பிய கார்டெல்களுடன் தொடர்பு கொண்ட கும்பல்கள் ஈக்வடாரின் அதிகாரத்தை பிடிக்க போட்டியிட்டு வருவதால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில், "இந்த குழுக்களை அழிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப்படைகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று நோபோவா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை ஏந்திய தாக்குதல்காரர்கள் குயாகுவில் உள்ள TC தொலைக்காட்சியின் ஸ்டுடியோவை தாக்கியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்டூடியோவில் 30 நிமிடத்திற்கு மேல் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் நடந்தன. அதன் பின் அங்கு வந்த அதிகாரிகள் குண்டர்களை பிடித்தனர். அந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.