LOADING...
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்
கல்பேகி சூறாவளியால் பிலிப்பைன்ஸில் 114 பேர் பலி

பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
02:09 pm

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது. அந்நாட்டின் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை குறைந்தது 114 பேர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திடீர் வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கியவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த சேதமடைந்த மத்திய மாகாணமான செபுவில் மட்டும் 71 பேர் உயிரிழந்தனர்.

தென் சீனக் கடல்

தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது சூறாவளி

செபுவில் 65 பேர் உட்பட மொத்தம் 127 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூறாவளி புதன்கிழமை தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. கல்பேகி சூறாவளியால் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,60,000 க்கும் அதிகமான கிராமவாசிகள் இடம்பெயர்ந்துள்ளனர். அதிபர் மார்கோஸ் அறிவித்த அவசரநிலை, அவசரகால நிதியை விரைவாக விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்கவும் உதவும். கல்பேகியின் பேரழிவைச் சமாளித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த வார தொடக்கத்தில் வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கக்கூடிய மற்றொரு சூறாவளி குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.