இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து, வேலை மோசடி மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் இந்த புதிய முடிவு, வரும் நவம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான ஒருவழி விசா விலக்கு வசதியை ஈரானிய இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22 முதல், ஈரானுக்குப் பயணம் செய்யும் அல்லது அதன் வழியாக (transit) கடந்து செல்லும் இந்தியர்கள் அனைவரும் விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மத்திய அரசின் தீவிர எச்சரிக்கை
விசா விலக்கு வசதியைப் பயன்படுத்தி இந்தியர்கள் மோசடிக்கு உள்ளாவது குறித்து வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும், அல்லது ஈரான் வழியாக மற்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கப்பட்டும் பல இந்தியர்கள் ஈரானுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். விசா இல்லாத சலுகையை பயன்படுத்தி ஈரானுக்கு வந்தவர்கள், அங்கு வந்த பிறகு பணயத் தொகைக்காகக் கடத்தப்பட்ட பல சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே, ஈரானுக்குச் செல்லத் திட்டமிடும் இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வழியாகப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறும் இடைத்தரகர்களை முற்றிலும் தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.