மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!
மூளையை முடக்கும் 'நாக்லேரியா ஃபாவ்லேரி' என்ற நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்கொரிய நாட்டை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தாய்லாந்தில் தங்கி இருந்துவிட்டு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தன் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். திரும்பிய அடுத்த நாளே இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு 'நாக்லேரியா ஃபாவ்லேரி' நோய் இருப்பதை உறுதி செய்தனர். அதன் பின், இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், 21ஆம் தேதி சிகிச்சை பலன் இல்லாமல் இவர் உயிரிழந்தார்.
நாக்லேரியா ஃபாவ்லேரி நோய் கிருமியின் விவரங்கள்:
'ஒரு செல்' உயிரியான இந்த நோய் கிருமி, வெதுவெதுப்பான நன்னீரில் உருவாகி வளரக்கூடியது. சுவாசத்தால் மனித உடலுக்குள் நுழையும் இது, நேராக மூளையைப் பாதிக்க கூடியது. இந்த நோய் கிருமியை ஆராய்ந்து உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர் மால்கொம் ஃப்லோர் ஆவார். இதுவரை, இந்த நோய் கிருமியின் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிருமி தாக்கினால் 97% மரணம் நேர்வது உறுதி . இந்த கிருமி மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது. அறிகுறிகள்: தலைவலி, காய்ச்சல், தும்மல் மற்றும் வாந்தி. முன்னெச்சரிக்கைகள்: கிருமி கண்டறியப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும். கோடையில் இந்த கிருமியின் வீரியம் அதிகமாக இருக்கும்.