உலக கிரிக்கெட் சரித்திரம்: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி அல்ல, 12 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உலக சாதனையாளர்
செய்தி முன்னோட்டம்
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயது 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கரின் சாதனையைத் தகர்த்தார். இந்திய அளவில் இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடப்பட்டாலும், ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றை உற்று நோக்கினால் வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயது வீரர் அல்ல. உலக கிரிக்கெட் அரங்கில் தற்போதைய ஐசிசி விதிமுறைகளையும் தாண்டி, வெறும் 12 மற்றும் 14 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வீரர்கள் வரலாற்றில் உள்ளனர்.
12 வயது
12 வயதிலேயே உலக சாதனை படைத்த சஜ்ஜிதா ஷா
ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே (ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் சேர்த்து) மிக மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமான உலக சாதனையாளர் பாகிஸ்தானை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீரர் சஜ்ஜிதா ஷா ஆவார். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களம் கண்டபோது அவரது வயது வெறும் 12 வயது 171 நாட்கள் மட்டுமே ஆகும். பெண்கள் கிரிக்கெட்டில் இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாத வரலாற்றுப் பதிவாக இந்த சாதனை நீடித்து வருகிறது.
ஆடவர் கிரிக்கெட்
ஆண்கள் கிரிக்கெட்டின் மிக இளம் வயது உலக சாதனையாளர்கள்
ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்த உலக சாதனையானது அசோசியேட் நாடான ரொமேனியாவை சேர்ந்த மரியான் கெராசிம் வசம் உள்ளது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கேரியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய போது அவரது வயது 14 வயது 16 நாட்கள் மட்டுமே ஆகும். அதே நேரத்தில், ஐசிசியின் முழுநேர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்த சாதனையானது பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹசன் ரசாவிடம் உள்ளது. இவர் கடந்த 1996 இல் ஜிம்பாப்வேக்கு எதிராகத் தனது 14 வயது 227 நாட்களில் அறிமுகமானார்.
இந்தியா vs இங்கிலாந்து
இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி
இதற்கிடையே மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் 43 ரன்கள், இஷான் கிஷனின் 49 ரன்கள் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் 37 ரன்கள் ஆகியவற்றின் உதவியோடு 20 ஓவர்களில் 190 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
ஜேக்கப் பெத்தல்
ஜேக்கப் பெத்தெலின் அதிரடி ஆட்டமும் வெற்றியும்
தொடர்ந்து 191 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணிக்குத் தொடக்கத்திலேயே அர்ஷ்தீப் சிங் அதிர்ச்சியளித்தார். அவர் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் ரன் ஏதுமின்றி டக் அவுட் செய்து அசத்தினார். இருப்பினும், கேப்டன் ஹாரி புரூக்கின் அதிரடியான 39 ரன்களும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 76 ரன்கள் குவித்த ஜேக்கப் பெத்தெலின் அதிரடி ஆட்டமும் இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. ரவி பிஷ்னோய் வீசிய ஒரு ஓவரில் மட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 29 ரன்கள் விளாசி ஆட்டத்தை தங்களது வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.