விஜய் தைரியம் இல்லாதவர்: திருச்சியில் நேரடி மோதலுக்கு அழைப்பு விடுத்த இனிகோ இருதயராஜ்!
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் திமுக இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்துள்ளது. நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நேரடி சவால்
திருச்சி கிழக்கில் நேரடி சவால்
திருச்சி கிழக்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ், விஜய்யின் இரட்டைத் தொகுதிப் போட்டி முடிவைக் கடுமையாகச் சாடியுள்ளார். விஜய்க்குத் திராணி இருந்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டு, தைரியமாகத் திருச்சி கிழக்கில் மட்டும் என்னை எதிர்த்துப் போட்டியிடட்டும் என அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இனிகோ இருதயராஜின் விமர்சனங்கள்
இரண்டு தொகுதிகளில் போட்டி
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது விஜய்யின் பயத்தைக் காட்டுகிறது என்றும், அவருக்குப் போதிய தைரியம் இல்லை என்றும் விமர்சித்தார். பாதுகாப்பிற்காகப் பெரம்பூரைத் தேர்வு செய்துள்ள விஜய், முடிந்தால் அங்கிருந்து விலகித் திருச்சி கிழக்கில் மட்டும் களம் காண வேண்டும் என வலியுறுத்தினார். சினிமாவில் நடிப்பது வேறு, மக்களுக்காகக் களத்தில் நின்று பணியாற்றுவது வேறு எனத் தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.
உத்தி
விஜய்யின் இரட்டை தொகுதி உத்தி
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அக்கட்சியின் தலைவர் விஜய். வட தமிழகத்தில் ஒரு தொகுதியையும் (பெரம்பூர்), மத்திய தமிழகத்தில் ஒரு தொகுதியையும் (திருச்சி கிழக்கு) தேர்வு செய்துள்ளார். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை முழுமையாகப் பெற இந்த இரட்டைத் தொகுதி வியூகம் (Double Constituency Strategy) உதவும் எனக் கருதப்படுகிறது. விஜய்யின் இந்த முடிவை திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன.