சிறப்பு தகுதி நீக்கம்: ஜம்மு காஷ்மீரின் மன்னர் வாரிசும், காங்கிரஸின் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுவது என்ன?
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய பரபரப்பான தீர்ப்பில், அரசியல் களம் சற்று கலவரப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். மத்திய அரசின் பிரதிநிதிகள் பலரும் அந்த தீர்ப்பை வரவேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கின் மகனுமான கரண் சிங் அந்த தீர்ப்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்றும், எனவே அதனை ரத்து செய்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
"இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவிர்க்க முடியாதது"
அந்த தீர்ப்பு குறித்து ANIக்கு பேட்டி அளித்த கரண் சிங்,"இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசு என்ன செய்ததோ அது சட்டப்படி செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். மேலும்,"உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவிர்க்க முடியாதது. ஏனெனில், உச்ச நீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது". "தேவையில்லாமல், சுவற்றில் முட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. அவர்கள் தங்கள் சக்தியை அடுத்த தேர்தலில் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.