பலியான 15 நபர்களில் 10 பேர் தமிழர்கள்! வியட்நாமில் நேர்ந்த கோர விபத்தின் முழு பின்னணி
செய்தி முன்னோட்டம்
வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே சனிக்கிழமையன்று நிகழ்ந்த கொடூர படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களும் பிரபல லாவா மொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. லாவா நிறுவனம் தனது தென்னிந்திய விநியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஸ்பான்சர் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்தின் போது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 14 பேர் நிறுவனத்தின் வணிகக் கூட்டாளிகள் (Channel Partners) என்றும், ஒருவர் நிறுவனத்தின் ஊழியர் என்றும் லாவா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகம்
பலியானவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
ஹனோயில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், 3 பேர் ஆந்திரப் பிரதேசத்தையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவை சேர்ந்த மொத்தம் 110 லாவா விநியோகஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த சுற்றுலா குழுவில் ஒன்றாக பயணித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வர வியட்நாம் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக லாவா நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
ஊழியர் வாக்குமூலம்
மூன்று நிமிடத்தில் கவிழ்ந்த படகு: தப்பிய ஊழியர் வாக்குமூலம்
இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிர்மல் குமார் என்ற லாவா ஊழியர் விபத்தின் கொடூரத்தை விவரித்துள்ளார். அவர் கூறுகையில், "நாங்கள் பயணித்தது 36 பேர் அமரக்கூடிய ஒரு மூடிய அதிவேகப் படகு. படகு புறப்பட்ட அடுத்த மூன்று நிமிடங்களிலேயே ஒரு பயங்கரமான புயல் காற்று படகைத் தாக்கியதால் அது அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது. படகின் முன்பகுதியில் இருந்த நாங்கள் சுமார் 20 பேர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினோம். ஆனால், பின்பகுதியில் இருந்த 15 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர்." எனத் தெரிவித்துள்ளார்.