'வாக்குப்பதிவு நேரத்தை நீட்டியுங்கள்' என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதிய அவசரக் கடிதம்; ஏன்?
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியான கோரிக்கைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். போக்குவரத்து நெரிசல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக வாக்காளர்கள் படும் அவதி குறித்து அவர் தனது கடிதத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்த பிறகு விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். "பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இது நிர்வாகத்தின் திட்டமிடல் குறைபாடா அல்லது திட்டமிட்ட சதியா என்ற ஐயம் எழுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Thalaivar @TVKVijayHQ writes to The Chief Election Commissioner regarding Urgent Intervention Required
— VTL Team (@VTLTeam) April 23, 2026
Deploy Emergency Public Transport for Thousands Stranded at Bus Terminals in Chennai and Other Cities;
Extend Polling Hours by 2 Hours to Safeguard Democratic Rights and… pic.twitter.com/rE52TsWP8V
வாக்குப்பதிவு நேரம்
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசலால் வாக்காளர்கள் தங்களது தொகுதிகளுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று விஜய் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். மாலை நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வந்து சேரும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டியது ஆணையத்தின் கடமை என்றும், இதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
புகார்
மந்தமான வாக்குப்பதிவு குறித்த புகார்
பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக நடைபெறுவதாக வரும் புகார்களையும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். இது வாக்காளர்களைச் சோர்வடையச் செய்து, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதத்தைக் குறைக்க வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு மேற்பார்வை அதிகாரியை நியமித்து, எவ்விதத் தாமதமுமின்றி வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனநாயகத்தின் முதுகெலும்பான வாக்குரிமையை நிலைநாட்டத் தேர்தல் ஆணையம் வெறும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.