Loading...
காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: தவெக அரசின் புதிய உத்தரவு பின்னணி
காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: தவெக அரசின் புதிய உத்தரவு பின்னணி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

கடந்த திங்கட்கிழமை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கிர்லோஷ்குமார் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார்.

விவரங்கள்

காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் என்றால் என்ன?

திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) மூலம் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 18 கிராமங்களை உள்ளடக்கிய 62.78 சதுர கிலோமீட்டர் பகுதி பரப்பளவு கொண்டது இத்திட்டம்.

இந்த திட்டத்தின் கால அளவு 2025 முதல் 2045 வரையிலான 20 ஆண்டுகால நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

காஞ்சிபுரத்தின் நெரிசலைக் குறைத்து, தொழில் மற்றும் பாரம்பரிய மையமாக மாற்றும் நோக்கில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதலே இதன் நோக்கமாகும்.

பின்னணி

ரத்து செய்யப்பட்டதற்கான பின்னணியும் அரசியல் விவாதங்களும்

பரந்தூரில் விவசாய நிலங்களையும், 12 கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படக் கூடாது எனக் கூறி அத்திட்டத்தை விஜய் அரசு ரத்து செய்தது.

அதன்தொடர்ச்சியாக, விவசாய நிலங்கள் கையகப்படுத்துதல் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு CMDA எதிர்கொள்ளும் நிகர கடனை கருத்தில் கொண்டு தேவையற்ற நகர வளர்ச்சி திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தவெக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்களை முடக்கி வருகிறது. இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் செயல்" என திமுகவும், தொழில்முனைவோர் சிலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT